Saturday, November 15, 2008

சட்ட மாணவர்களின் மோதல்களும்: திமிறி எழும் சாதீய உணர்வுகளும்…


"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
- புத்தர்
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டதை ,அடித்ததை, அடி வாங்கியதை 50,002 முறையாக நம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிர்வலைகளை குறையா வண்ணம் பேணிக் காப்பதில் மிகச் சிறந்த சேவைகளை (?) நமது ஊடகங்கள் வெற்றிக்கரமாக செய்து வருகின்றன.
இந்திய தொலைக்காட்சிகளில்…முதன் முறையாக..வீதிக்கு வந்த சில மணி நேரங்களே ஆன திரைப்படமாய் சட்டக் கல்லூரி மாணவர்களின் குழு சண்டையும் மாறிப்போனதுதான் உச்சக் கட்ட வேதனை. சட்டக்கல்லூரிகளில் இது போன்ற எண்ணற்ற குழு சண்டைகள் மாணவர்களிடையே நடந்திருக்கின்றன. இந்த சண்டை சமீபத்தில் நடந்த சண்டை. அவ்வளவுதான்.இதில் பரபரக்கவோ..பாய்ந்து தாக்கவோ எதுவுமே இல்லை. கிராமப் புற அரசுக் கல்லூரிகளில் இருப்பது போலவே சட்ட மாணவர்களுக்கு இடையிலும் சாதீயம் சார்ந்த அரசியல் வழக்கமான ஒன்று.நான் வசித்த கீழ தஞ்சை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகளில் முக்குலத்தோர் என சொல்லப் படக்கூடிய கள்ளர்- அகமுடையார் என்ற இரு சாதியினருக்கு இடையேயே இதை தாண்டி கடுமையான சண்டைகள் நடந்திருக்கிறது. பல மாணவர்கள் இரு தரப்பிலும் தாக்கப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக ஊடக எழுச்சியும்,போட்டியும் எதையும் பரபரப்பாக்க வேண்டும் என்ற உணர்வும் ,மறைந்து கிடக்கும் பிழைப்பு அரசியலுமே இன்னும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அதிர்வுகளுக்கு காரணம்.சென்னை சட்டக் கல்லூரி விடுதியில் எப்போதும் மாணவர்களை தவிர வெளியாட்கள் அதிகம் பேர் வந்து தங்கி இருப்பார்கள். வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தெற்கு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அடிதடி விருந்தினர்களுக்கு எப்போதுமே அடைக்கலம் தரும் இல்லமாய் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் விடுதி திகழும்.மேற்கண்ட விருந்தாளிகளின் தாக்கமும் ,நிழலும் மாணவர்களை மேலும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. மாணவர்கள் தங்களது சாதீய அடையாளங்களை உணர்ந்து குழுவாக பிரிவது பெரும்பாலும் முதல் ஆண்டில் இருந்தே துவங்கி விடும். அதற்கு மூத்த மாணவர்களின் உதவியும் , வழிக் காட்டுதல்களும் இருக்கும். பிறகு குழு குழுவாக சேர்ந்து போஸ்டர் அடிக்க துவங்குவார்கள். மாணவிகளும் மேற்கண்ட குழுக்களின் அடிப்படையிலேயே செயல் பட துவங்குவார்கள். ஒரு கல்லூரியில் எச்சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் மற்ற குழுக்களாகவும் பிரிவார்கள். கும்பகோணம் போன்ற பகுதிகளில் வன்னியர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து இருப்பார்கள். சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்ததும் இது போன்ற பிரச்சனைதான். மாணவர்களுக்குள் எப்போது ,யாரால் சாதீயம் புகுந்தது,புகுத்தப் பட்டது என்பதெல்லாம் இந்த பிரச்சனையின் பின்புலமாக நாம் ஆராய வேண்டியவை. எல்லா கல்லூரிகளும் சாதியை மறுத்த மாணவர்கள் குறைந்த பட்சம் இருக்கவே செய்வார்கள்.இவர்கள் சிறுபான்மை குழுவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

சாதீய மயமாக்கப் பட்ட கிராம வாழ்வின் எச்சமாய் கல்லூரி வாழ்க்கையும் மாற்றப் பட்டதன் துவக்கமே இந்த பிரச்சனைக்கான மூலமாக நாம் கொள்ளலாம். அதனால் தான் கிராமங்கள் அழிய வேண்டும் என்றார்கள் பெரியாரும், அம்பேத்காரும். சாதி ஒழிந்து விட்டது: இங்கு கீழோர்,மேலோர் இல்லை என மார் தட்டும் உன்னத சமூகத்தில் நாம் வசிக்கவில்லை என்பதனை முறையாக ஒப்புக் கொண்டு அல்லது ஒப்புக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு இந்த மாணவர்களின் பிரச்சனையை நாம் அணுகுவதுதான் நேர்மையானதாக இருக்கும்.இன்னும் உத்தபுரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
திண்ணியமும், வெண்மணியும்,பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டார் மங்கலம் ஆகியவையும் நம் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இன்னும் கோவை மாவட்டத்தில் இரட்டை குவளை முறை இருப்பதை நம் பெரியார் திராவிட கழக தோழமைகள் படம் பிடித்து காட்டினார்கள். மனிதரில் கீழோர்-மேலோர் இல்லை என்று உரத்த குரல் எழுப்பும் தோழமைகள் சமூகத்தில் வேரூன்றி போய் கிளைத்து நிற்கும் சாதீயம் இருப்பதை ஒத்துக் கொள்வதில் ஏதோ முரண் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.நாடெங்கும் நடக்கும் சாதீய கலவரங்களில் தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும்,அம்பேத்கார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டும்,அகற்றப்பட்டும் வருவதும் தீவிர நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிறது. மாணவர்கள் தாக்கப் படுவது சாதீய ஒழிப்பிற்கான முதல் நிலை என்ற நிலைப்பாடு எப்படி ஆபத்தானதோ …தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் சாதீய செயல்பாடுகளை நியாயப் படுத்துவதும்,நாடெங்கும் தலித் மாணவர்களை தனிமைப் படுத்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதும் ஆபத்தானதுதான். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த பிரச்சனையை சாதீய வயப்படுத்தும் வேலைகளை நமது ஊடகப் பெருமக்களும், தமிழ் நல் உலகில் வாழ்ந்து வரும் அரசியல் தலைவர்களும் வெகு திறமையாக செய்து வருகின்றனர்.
இரத்த வாசனையை எப்போதும் மோப்பம் பிடித்து திரியும் மிருகமாய் ஊடகங்கள் மாறி வெகு காலமாகி விட்டது.பல்வேறு காரணிகளின் விளைவாய் எழுந்திருக்கும் ஒரு பிரச்சனையில் பொத்தாம் பொதுவாய் ஒரு நிலைப்பாடு எடுத்து குறை பேசி திரிவதும் சாதீயம் ஊடான செயலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. இது போன்ற களங்களில் முற்போக்காளர்கள் ,சாதி மறுப்பாளர்கள் என கருதும் தோழர்கள் முதலில் பிரச்சனைகளின் பல்வேறு கோணங்களை புரிந்துக் கொள்ளும் ,ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். கல்வியியல் நிறுவனங்களில் சாதீய செயல்பாடுகளை மட்டுப் படுத்தும் விதமாக கல்வி முறைகள் மாற்றப் பட வேண்டும் .
டாக்டர் அம்பேத்காரும், தந்தை பெரியாரும் இன்னும் அளவுக்கதிமாக தேவைப்படும் காலமாக அமைந்து விட்ட சூழலில் முற்போக்காளர்கள் இது போன்ற பிரச்சனைகளை சாதீயம் சார்ந்த உணர்வுத் தளங்களில் அணுகாமல் அறிவுத் தளத்தில் அணுகி உண்மைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இரு பக்கமும் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப் பட்டு இருக்கிறார்கள். இரு பக்கமும் நியாயப்படுத்தவே முடியாத தவறுகள் நடந்திருக்கின்றன. தாக்குதல் நடத்தும் அளவிற்கு தீவிரமாகி போன மாணவனின் மனநிலையும், அவன் ஏற்கனவே எதிர் கொண்ட இழிவுகளும் இந்த சமயத்தில் சமமான அக்கறையோடு ஆய்விற்கு உட்படுத்த படவேண்டும்.
மீண்டும் மாணவர்களிடையே இது போன்ற சாதீயம் சார்ந்த மோதல்கள் நிகழா வண்ணம் தமிழர் என்ற உணர்வுத்தளத்தில் மாணவர்களை இணைக்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாக நான் கருதுகிறேன்.அதற்கான புரிந்துணர்வு தளங்களை மாணவர்களிடையே ஏற்படுத்துவதில் சமூகத்தின் பங்கும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளை தோழமைகள் தமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சாதீய மிருகத்தின் கழுத்தை நெறித்து கொல்லப்படுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Wednesday, June 4, 2008

ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…



http://jeyamohan.in/?p=488

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு
என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…
மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…

உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்..

தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கூடங்கள் குறித்த தங்கள் அவதானிப்பில் நான் முரண்பாடு கொள்கிறேன்..கல்வி என்பது எங்கோ மாய உலகில் மறைந்து கிடக்கும் அதிசயமாய் மறைத்து வைக்கப் பட்டிருந்த காலத்தில் …ஊரின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சேரிகளில் வெண்ணிற ஆடைகளோடு நுழைந்து கல்வி அளித்து, சுகாதாரம் போதித்து, மருத்துவம் தந்தது பாதிரிமார்கள்தான்.அவர்களுடைய நோக்கம் தங்கள் மதத்தை பரப்ப சேவையை கருவியாக பயன்படுத்துவதாக இருக்கலாம்..அதனாலென்ன…எந்த மதம் இறந்தால் என்ன..? எந்த மதம் பிறந்தாலென்ன..?

சூத்திரன் நாவிற்குள் பைபிளால் சரஸ்வதி அமர்ந்ததுதான் அதில் நடந்த நன்மை..

மற்ற படி அஜிதன் எதிர்கொண்ட சிக்கலான வாழ்வியல் முரண்கள் -எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது..எந்த ஆசிரியரும் மாணவனை மனிதனாகக் கூட நினைப்பதில்லை..அவர்களுக்கு தங்கள் பணி குறித்து இருக்க வேண்டிய நியாயமான அக்கறை இல்லை..அடித்தால்…அவமதித்தால் தரையில் கிடப்பதைக் கூட மாணவன் தலையில் ஏற்றி வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொள்வார்கள் போல..

தங்களுடைய பதிவு எனக்கு சமீபத்தில் வெளிவந்த அமீர்கானின் தாரே ஜமீன் தார் என்ற திரைப் படத்தை நினைவுப் படுத்தியது…







நம் நாட்டு குழந்தைகளுக்கான கல்வி முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்பதான தங்களுடைய அக்கறையில் நானும் பங்கேற்கிறேன்….

எனது 4 வயது மகனை என் மனைவி பள்ளிக்கு அனுப்பும் போது போர்க் களத்திற்கு செல்லும் மான் போல தயார்ப் படுத்தி அனுப்பவது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும் செயலாகவே தெரிகிறது.ஏனென்றால் அவன் டாக்டராகணுமாம்…சொல்லி சொல்லி வளர்க்கிறாள் என் மனைவி.
என் குழந்தை ஒரு டாக்டராகவோ, ஒரு பொறியாளராகவோ ஆக்க எனக்கு துளி கூட விருப்பமில்லை என என் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறேன்..

பிறகு என்னதாண்டா அவனை செய்ய போற..? என்று கோபமாய் கேட்ட என் தந்தையை பார்த்து அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது..அதனால அவன நடிகனாக்கப் போறேன் என்று வெறுப்பாய் பேசி விட்டு வந்திருக்கிறேன்…

என்ன உலகம் இது…

ஒழுங்கமைவுகள் என்பதன் பேரில் குழந்தைகள் மீது அறிவிக்கப் படாத ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தி இருக்கிறது இந்த கல்வியும் சமூகமும்…

இங்கு எந்த குழந்தைக்கும் ஓடி ஆட அனுமதி இல்லை…காலில் இறுக்கிக் கட்டிய காலணிகளோடு…கழுத்தில் இறுக்கும் டைகளோடு..பொங்கி வழியும் புத்தகங்களோடு ..வானுயர்ந்த மதில்களை உடைய கல்விக் கூடம் என்ற சிறையில் அடைக்க அவர்களை அழைத்து போக போலீஸ் வேன் போல ஒரு வேன்…

எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் புன்னகை இறந்து கிடக்கிறது…

ஏதாவது செய்து …இந்த குழந்தைகளின் மகிழ்வை,பால்யத்தை மீட்டே ஆக வேண்டும்….

என் துயரத்திற்கான ஆறுதல்- அஜிதனின் வெற்றியும், மதிப்பெண்ணும்…

அந்த வகையில் எளிமையாய் படித்து, வலிமையாய் தேர்ந்த அஜிதனுக்கு என் வாழ்த்துக்களும் …பாரட்டுகளும்….

தங்கள் ..
மணி.செந்தில்குமார்,
வழக்கறிஞர்.
கும்பகோணம்.

இந்த கடிதத்திற்கு திரு.ஜெயமோகனின் பதில்:

அன்புள்ள மணி செந்தில் அவர்களுக்கு,
நாம் நம் குழந்தைகளை 'வளர்க்க' முடியாது. அவர்களுடன் சிலவற்றை பகிர்துகொள்ள மட்டுமே முடியும். நாம் அவர்களை பொருட்படுத்தி , அவர்களின் உற்சாகமானதும் நம்பிக்கை நிறைந்ததுமான உலகை சிதைக்காமல் அதே உற்சாகத்துடன் ஈடுபட்டுச் சொலும் எதையும் வர்கள் கேட்பார்கள் என்றுதான் நான் எண்ணிகிறேன். இன்னொருவரின் கனவை வாழும்படி ஒருவரை நிர்பந்திப்பது கொடுமையானது.
தங்கள் கடிதம் கண்டேன். ஒரே வகையான அனுபவங்கள் வழியாக கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போது கடிதங்கள் வழியாக உருவாகியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் எப்படி நுண் உணர்வுகளை அவித்து விட்டு போட்டி உலகின் சவால்களை எதிர்கொள்வதெ என்பதே அது. ஒரு சமன்பாட்டைக் கண்டுகொள்கிறவர்களே ஏதாவது சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள். போட்டி உலகை மாற்றுவதென்பது உடனடியாக நம் கையில் இல்லை. ஆனால் இந்த சமரசம் வலியும் வதையும் கூடியதாக இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானதக இருக்கிறது. அதற்கு அடிபப்டையில் இலக்குக்காக எதையும் செய்யும் நோக்கை சற்றே விலக்கி அன்பின் அடிப்படையில் நம் குழந்தைகலுடன் உரையாட முனைந்தாலே போதும் . நான் எந்த கொள்கைகளையும் இது சார்ந்து முன்வைக்க மாட்டேன், குழந்தைகளுடன் உரையாடுங்கள் என்பதைத் தவிர

ஜெயமோகன்

தோழர்களே….
குழந்தைகளின் கல்வியும் ,அதனைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிக்கலாகி வருகின்றன..
நம் நாட்டு கல்வி அமைப்பையும், அதனைச் சார்ந்த நிறுவனக் கோட்பாடுகளையும் நாம் மறுபரீசிலனை செய்து தீர வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்…

Monday, June 2, 2008

கலைஞர்-85


எனக்கு ஆரம்பம் முதலே கலைஞர் மீது தீராத வெறுப்பும் ,வன்மமும் இருந்து வருகிறது.

எதிர் கட்சியாக இருக்கும் காலத்தில் எட்டி பாய்ந்து ஈட்டி எறியும் கலைஞர்… ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காலங்களில் முனை மழுங்கி அமைதி காப்பது…

இன்னும் ஈழப் போராட்டத்தை தமிழினத்தின் மூத்த ஆளுமை என்கிற முறைமையில் முன்னெடுத்து செல்லாதது…

பார்ப்பன ,பண்டார பாஜகவோடு பெரியாரை சுமந்துக் கொண்டு கூட்டணி வைத்தது….
தமிழுணர்வையும்..தமிழின மேன்மையையும் நசுக்கும் காங்கிரஸின் காதலுக்காக …ஒகேனக்கலை ஒத்தி போட்டது…

அடிக்கடி ராஜ தந்திரம் என்ற போர்வையில் கூடா நட்பும், வழுக்கும் வாதுரையும் முன் வைப்பது…

இன்னும் நிறைய …நினைக்க …நினைக்க ..சுரக்கிறது…

எல்லாம் சரிதான்..

இருந்தும்..அந்த நள்ளிரவு கைதின் போது…என் குடும்பத்து மூதாதையை காக்கிக் கரங்கள் இழுத்துச் சென்றது போல…இன்று நினைத்தாலும் …உடல் நடுங்குகிறது….

காரணம் மிக எளிது…

தமிழகத்தின் குக்கிராமத்தில் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட குலத்தில் தோன்றி..பெரியார் ,அண்ணா என்ற பரம்பரையின் நீட்சியாய்,நினைவின் தொடர்ச்சியாய் இருக்கின்ற இருப்பு..

இன்னும் தொலைக்காட்சியில் தமிழ் கவிதை பாடி தன்னை தமிழ் கவிஞராக காட்டிக் கொள்ளும் ஆர்வம்… …

அதிகாலையில் துவங்கி நள்ளிரவு வரைக்கும் பணிபுரிந்தாலும்…புத்தகங்களை வாசித்தும்,நேசித்தும் இருந்து வருகிற வாழ்க்கை…

பாலம் கட்ட ராமன் என்ன இன்ஞ்சினீயரா …என்று கேட்கும் பெரியார் திமிர்.
இறந்த சகோதரன் தமிழ் செல்வனுக்காக -உள்ளே துடிக்கும் ரத்த பந்தத்தின் விளைவாய்…பொத்துக் கொண்டு பொங்கிய கவிதை….

முதுமையின் வெளியில்..துவளாமல்..சுருங்காமல் …கடிதம் வழியாய் முரசொலி அடிக்கிற கம்பீரம்…
நம்மை உயர்த்திய தந்தை பெரியாரை தனது ஆளுமையாக முன் வைக்கும் பற்று..

இன்னும் எழுதுவது…குத்தலும் ….கொள்ளலுமாக தமிழ் மொழியை தனதாக்கி கொண்டு எதிரிகளை நிர்மூலப் படுத்துவது ……

இன்னும்..இன்னும்..பிற.

நான் இந்த தமிழ் மண்ணில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்க விரும்பும் ஆளுமையாகவும்…ரகசியமாகவேனும் நேசிக்க விரும்பும் ஆளுமையாகவும் அவரே இருக்கிறார்.


தமிழ் அரசியல் வரலாற்றின் எஞ்சும் பெருமிதமாக கலைஞரே நம் முன்னால் காணக் கிடைக்கிறார்..

உலகம் முழுக்க பரவிக் கிடக்கும் தமிழினத்தின் மூத்த ஆளுமை …
கலைஞரிடம் விமர்சனம் செய்ய ஏராளம் இருக்கின்றன..

நாம் உரிமையாய் கோபித்துக் கொள்ளவும், சண்டைப் போடவும்,,ஏக வசனத்தில் ஏசவும்
அவரிடம் ஏராளம் இருக்கின்றன…..

முரண்படவும் …முட்டித் தள்ளவும்…இன்னும் நிறைய இருக்கின்றன நெஞ்சில்…
இருந்தும்…அந்த கிழவனுக்கு ஒன்று என்றால்…மனம் அடித்துக் கொள்கிறது…

தமிழ்க் கிழவா……

நாங்கள் ஊடல் கொள்ளவும்,சண்டை போடவும், என்றும் நீங்கள் எங்களுக்கு வேண்டும்..

தமிழ் பேச….கவிதை தேட…காவியம் இயற்ற…கண்ணகி பாட ….பெரியார் பேச …என அனைத்துமாய் எங்களுக்கு நீங்கள் வேண்டும்…

கலைஞர் வாழ்க.
நலமாய்…களமாய்..
………………………
……………………………

நிறைய விமர்சனங்களோடும்…
நிறைய வாழ்த்துகளோடும்…

மணி.செந்தில்குமார்

Tuesday, May 20, 2008

எம்.வி.வெங்கட்ராம்..... பின்னிரவின் மழை…




மே 18...

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு...இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்....அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்...

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..


எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…


மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் ...நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''

- டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…


நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

Monday, May 19, 2008

பாரதி-இந்துத்வா வெறியரா..?


தோழர்களே...

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்...

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்........

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி.....


பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே......

என்ன காரணம்...?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்.....அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா...அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.....அது பாரதி வாழ்ந்த காலம்....

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது....

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு .....அத்தனை இடைஞ்சல்கள்...?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்....

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே...?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே...?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்.....கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ....

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் ...பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா...?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது...

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்.....

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்.....

நினைவின் சருகில்...

காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது.....

காலம் நம்மை கடப்பதும்...காலத்தை நாம் கடப்பதுமாய்...நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது.....

ஏதோ ஒரு நள்ளிரவில் ....தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்....கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க...பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த ...அவளைக் கண்டேன்...

அவளா...? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது...இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்.......அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்....

ஆம்...அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்....இதயத் துடிப்பு அதிகரித்தது.....காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது......

மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்...பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்....

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.....? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து.....முச்சிறைத்து கிடந்தேனோ......அந்த கைகள் தான் ...அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன.....

பேருந்து புறப்படுகிறது....அவள் அங்கேயே நிற்கிறாள்..

இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்...வலிக்காமல் வாழ்ந்திருப்போமே....

பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது....இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன...

வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு...விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்....ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..


ஆம்....அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.......இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது....முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.......

கொஞ்சம் நகர்றீங்களா...? ......

கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது.....என் எதிரே இருந்து நகர்ந்து ....சுவர் ஓரமாய் ...படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது......

அனைத்தையும்....வியப்பாகவும்...குதுகாலமாகவும்...ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்...ப்ளஸ் 2 படிக்கிற காலம்....

நம் அபத்தமான...வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை....காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்....

மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்...ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்....கவிதை..இலக்கிய முயற்சிகள்...எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்...பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்...கோரமும்....அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது....சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்....மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்....தூண்டும் சாகசமும் அற்புதமானவை.....இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்......
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ......அந்த பருவத்தில் தான்.....

என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது...காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்....பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்.....செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்...

இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்.....பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு.....இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்...அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்....சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து...சிதறடிக்கும்..... இருந்தும் தொடர்ந்து மோதுவாள்...... ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்........

தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்....

நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்....உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது ...சே ...நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்.....

என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்....சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்...அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன.....இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு......

(தொடரும்....)